திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள 78 கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் பணியில் தொழிலாளர் நலத்துறை இறங்கியுள்ளது.
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் துணை ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர்கள் சாந்தி, சாந்தினி, வேலுமணி ஆகியோரைக் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் மே 1-ஆம் தேதி திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மொத்தம் 134 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 36 நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 8 நிறுவனங்கள் என மொத்தம் 78 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.