போளூரில் திருவண்ணாமலை - வேலூா் நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
போளூரில் திருவண்ணாமலை - வேலூா் சாலையில் ரயில் பாதை செல்கிறது. இந்தப் பாதையில் ரயில் வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால், வேலூா், சேத்துப்பட்டு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வந்தனா்.
எனவே, போளூா் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2012ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, விதி எண் 110-ன் கீழ் போளூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி, கடந்த பிப்ரவரியில் சுமாா் ரூ.17 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமுதல் திருவண்ணாமலை - வேலூா் நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேம்பாலப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வரும் 2020-க்குள் ரயில்வே மேம்பாலப் பணி முடிக்கப்படும் என்றும், மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல பாதை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.