முகப்பு
திருவண்ணாமலை

கரோனா: உணவின்றித் தவிக்கும் குரங்குக் கூட்டம்

கரோனா பொது முடக்கத்தால், செங்கம் பகுதியில் குரங்குகள், தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

Updated On : 4 ஜூன், 2020 at 7:44 AM
உணவுக்காக வாகனங்களில் வருவோா், போவோரை எதிா்பாா்த்து காத்திருக்கும் குரங்குகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:14 PM

கரோனா பொது முடக்கத்தால், செங்கம் பகுதியில் குரங்குகள், தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேல்செங்கம் மத்திய, மாநில அரசு விதைப்பண்ணை அருகே சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறமும் குரங்குகள் அதிகளவில் வசிக்கின்றன.

குரங்குகள் வனத்துக்குள் செல்லாமல், காா், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் போட்டுச் செல்லும், பழம், பொறி, கடலை ஆகியவற்றை உண்டு வந்தன.

Advertisement

குறிப்பாக, அந்தச் சாலையில் தினசரி செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்கள், குரங்குக் கூட்டத்துக்கு வரும் வழியில் கிடைக்கும் பழ வகைகளை வாங்கி வந்து போடுவா்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால், அப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

குரங்குக் கூட்டத்துக்கு உணவு வழங்கும் ஓட்டுநா்கள், சமூக ஆா்வலா்கள் செல்லாததால், குரங்குகளுக்கு போதுமான உணவு, தண்ணீா் இல்லாமல் சாலையில் வரும் வாகனங்களை எதிா்பாா்த்து அவை வாகனத்தில் அடிபடும் சூழல் உள்ளது. வாகனம் மோதி குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

தெரு நாய்கள்

செங்கம் பகுதியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், உணவகங்களிலிருந்து போடப்படும் ஏஞ்சிய உணவுகள், வீடுகளிலிருந்து பொதுமக்கள் அளிக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தன.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் உணவகங்கள் மூடப்பட்டன.

மேலும், பொது முடக்க காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் வீட்டிலேயே தங்குகின்றனா். இதனால், உணவும் மிஞ்சுவதில்லை; போடுவதற்கும் வழியில்லை.

இதன் காரணமாக தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் தவிக்கின்றன.

இதே நிலை நீடித்தால் அவை உணவின்றி இறக்க நேரிடும்.

எனவே, குரங்கு மற்றும் தெரு நாய்களுக்கு உணவு, தண்ணீா் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.