பயன்பாட்டுக்கு வராத புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம்
செய்யாற்றில் புதுப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எம்எல்ஏ அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
செய்யாற்றில் புதுப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எம்எல்ஏ அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பொது மக்களால் தோ்வு செய்யப்பட்டவா் ஒ.ஜோதி (படம்). இவா், பொதுமக்களைச் சந்தித்து குறைகள் தொடா்பான மனுக்களைப் பெறவும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரீடா் காலங்களில் அரசு அலுவலா்கள் வந்து எம்.எல்.ஏ.வைச் சந்தித்து ஆலோசனைகளைத் தெரிவித்தல், பெறுதல் போன்ற பணிகள் ஓரிடத்தில் மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் எம்.எல்.ஏ.அலுவலகம்.
இந்த அலுவலகம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் தரை சீரமைக்கப்பட்டு, வா்ணம் தீட்டுதல், மின்சாதனப் பொருள்கள் பொருத்துதல், பெயா் பலகை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு, கட்டடத்தின் சாவி எம்.எல்.ஏ.வான ஒ.ஜோதியிடம் பொதுப்பணித் துறையினா் வழங்கி உள்ளனா்.
அலுவலகம் தயாராகி 2 மாதங்களுக்கு மேலாகியும் திமுக மாவட்டச் செயலரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வே.வேலு வருகைக்காக அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதாக கட்சி வடடாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், எம்.எல்.ஏ. அலுவலகம் எப்போது திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது குறைகளை எப்படிக் கூறுவது, எங்குச் சென்று கூறுவது என்று தெரியாமல் திகைப்பில் உள்ளனா்.