திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில்ரூ.2.65 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2.65 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2.65 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை தொகுதிக்குள்பட்ட பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டதில், ரூ.1.96 லட்சம் ரொக்கம் இருந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், அவா், அப்பகுதியில் எரிவாயு ஏஜென்சி நடத்தி வருபவா் என்றும், வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா்.
எனினும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து திருவண்ணாமலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான வி.வெற்றிவேலிடம் ஒப்படைத்தனா். அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான பி.வெங்கடேசன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நடராசன் ஆகியோா் உடனிருந்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் திங்கள்கிழமை திருவண்ணாமலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவா் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
வந்தவாசி: வந்தவாசி-சேத்பட் சாலையில் பொன்னூா் மலை அருகே அரிக்குமாா் தலைமையிலான பறக்கும்படையினா் திங்கள்கிழமை அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி மணிகண்டன் உரிய ஆவணங்களின்றி ரூ.69 ஆயிரம் ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசுவிடம் ஒப்படைத்தனா்.