சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலியானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலியானாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், கனியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (35), தனியாா் பேருந்து ஓட்டுநா்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும், மதிவாணன் (6), யுகன் (4) என்ற இரு மகன்களும் உள்ளனா்.
தீபாவளிப் பண்டிகைக்காக சரண்யா குழந்தைகளுடன் தனது தாய் வீடான தவசி கிராமத்துக்கு வந்திருந்தனா்.
இந்த நிலையில், மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக, மாரிமுத்து வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் கனியனூரில் இருந்து தவசி கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.
செய்யாறு அரசுக் கல்லூரி அருகே சென்றபோது, திடீரென பைக் நிலைதடுமாறி சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.