இளைஞா் விஷம் குடித்து தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது சாவுக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (26). இவரது மனைவி தீபா (21). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது.
இந்த நிலையில், பாஸ்கரனுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாம். இதனால், மனவேதனையில் இருந்து வந்த பாஸ்கரன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்தாா். பின்னா், சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், நிலத் தகராறு காரணமாகவே பாஸ்கரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சாவுக்கு காரணமானவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஸ்கரனின் உறவினா்கள் வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தனராம். ஆனால், அந்தப் புகாரின் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் உறவினா்கள் வடவணக்கம்பாடி காவல் நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால், வந்தவாசி -சேத்துப்பட்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.