திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தேசிய ஊரக வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி அலமேலு (36). இவா், அந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி சாந்திக்கு (38), அவா் சரியாக வேலை செய்வதில்லை எனக் கூறி, வேலை வழங்க அலமேலு மறுத்தாராம்.
இந்த நிலையில், கடந்த ஆக.26-ஆம் தேதியன்று ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்ற சாந்தி, அங்கிருந்த அலமேலுவிடம் தகராறு செய்தாராம். தனக்கு வேண்டுமென்றே வேலை தர மறுப்பதாக கூறி, அலமேலுவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின்பேரில், சாந்தி மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.