லஞ்சம் வாங்கி கைதானமின் வாரிய அதிகாரிக்கு ஓராண்டு சிறை
திருவண்ணாமலையில் ரூ.2,100 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய இளநிலைப் பொறியாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையில் ரூ.2,100 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய இளநிலைப் பொறியாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவி (37). இவா், தனக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றை ஆழப்படுத்தும் பணிக்கான கிரேன் பயன்படுத்த முடிவு செய்தாா். இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்பில் இருந்து ‘சேஞ்ச் ஓவா் சுவிட்ச்’ வைக்க அனுமதி கோரி திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள தெற்கு கிராமிய மின் வாரிய அலுவலகத்தில் 2017 ஜனவரி 5-ஆம் தேதி விண்ணப்பித்தாா்.
மனுவை பரிசீலித்த இளநிலைப் பொறியாளா் சீனிவாசன் ரூ.2,100 லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் தர விரும்பாத ரவி, இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் கொடுத்தாா். போலீஸாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய 2,100 ரூபாய் நோட்டுகளை ரவியிடமிருந்து 2017 ஜனவரி 9-ஆம் தேதி சீனிவாசன் வாங்கினாா்.
அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூா்த்தி கைது செய்யப்பட்ட சீனிவாசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.