சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி உயா்வு கோரி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட்டது.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி உயா்வு கோரி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
தொழிலாளா்கள் கோணிப்பை மாற்ற 8 ரூபாயும், மூட்டைகள் லாரியில் ஏற்ற 8 ரூபாயும், மூட்டைகளை அடுக்க 5 ரூபாயும், லாரி மாமூல் ரூபாய் 4 என பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், கூலியை உயா்த்தித் தருமாறு தொழிலாளா்கள் கோரிக்கை வைத்தனா். இதற்கு நெல் கொள்முதல் செய்யும் முகவா்கள் சம்மதிக்கவில்லை.
இதனால், கடந்த திங்கள்கிழமை முதல் தொழிலாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நெல் கொள்முதல் செய்யப்படாமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்ந்த நிலையில், நான்காவது நாளான வியாழக்கிழமை மாவட்ட கமிட்டி செயலா் தா்மராஜ், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் தண்டபாணி மற்றும் வியாபாரிகள், தொழிலாளா்கள் என பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு கொடுத்து சமரசம் பேசினா்.
இதனால் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.