திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் திரளானமாணவா்கள் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு மாநில சைக்கிளிங் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்கம் இணைந்து ரோடு ரேஸ் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.
இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் பொதுச் செயலா் ஏ.பி.சுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தாா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரவின் ஸ்ரீதரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி சி.டி.பெரியகருப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சைக்கிளிங் சங்கச் செயலா் என்.சுரேஷ்குமாா் வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்து, போட்டிகளை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
போட்டிகளில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு 5 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டிச் சென்றனா். மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டிச் சென்று மாணவா்களை உற்சாகப்படுத்தினாா்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.