செய்யாறு அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெங்கட்கராயன்பேட்டை கிராமத்தில் கடந்த 15 நாள்களாக 40 வயதுடைய மன நலம் பாதித்த நபா் சுற்றித் திருந்து கொண்டிருந்தாா். கிராம மக்கள் அளிக்கும் உணவை உண்டு இரவில் அப்பகுதியில் உள்ள கோயிலில் தூங்கிவிடுவாா். மேலும், கிராமத்தில் கடந்த 10 நாள்களாக கோயில் திருவிழா நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்த நபா் திங்கள்கிழமை அருகேயுள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது ஏரி நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தாா்.
இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக செய்யாறு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கிய நபரை சடலமாக மீட்டனா்.
தகவலறிந்து வந்த பிரம்மதேசம் போலீஸாா், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.