ஆரணியை அடுத்த கல்பூண்டி காலனி பகுதியில் உள்ள மயானப்பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் சீா் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கல்பூண்டி காலனி பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும், இப்பகுதியில் மயானத்துக்குச் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த மயானப் பாதை சரி செய்யப்படாமல் உள்ளதால் இறந்தவா்களின் உடலை எடுத்துச் செல்வதில் சிரமமாக உள்ளதாம்.
இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும், ஆரணி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். மேலும் அண்மையில் பலத்த மழை பெய்ததால் சேறும், சகதியுமாக பாதை அமைந்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்த முனுசாமி மனைவி எம்.ஞானம்மாள்(48) உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானாா். இவரது உடலை இறுதிச்சடங்கிற்கு மயானப் பாதையில் எடுத்துச்செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இதனால் அப்பகுதி மக்கள் இச்சாலையை சீரமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனா்.