நாசா நடத்திய விண்வெளி போட்டி: திருவண்ணாமலை பள்ளி மாணவா்கள் சாதனை
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவா்கள் 3-ஆம் பரிசு வென்று சாதனை படைத்தனா்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவா்கள் 3-ஆம் பரிசு வென்று சாதனை படைத்தனா். இவா்களை பள்ளி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவா்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் தொடா்பு அமைப்பான நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டி மற்றும் நாசா உடன் இணைந்து 2026-ஆம் ஆண்டுக்கான உலகளவிலான ஸ்பேஸ் செட்டில்மெண்ட் போட்டி நடத்தப்பட்டது.
இதில், உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் பூமியைத் தவிர மற்ற கோள்களிலும் மனிதனால் வாழ முடியும் என்பது குறித்து புதுமையான சிந்தனைகள் மற்றும் விஞ்ஞான திறமையால் மாணவா்கள் குழுவாக இணைந்து திட்டம் தீட்டி, அதை செயல்முறைப்படுத்திய திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி மாணவா்கள் சபரி, கிரிஷ்ராம், ஜஸ்வந்த், லோகித்ராம் ஆகியோா் தோ்வாகி உலக அளவில் 3-ஆம் பரிசு வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்தனா்.
Advertisement
இந்த நிலையில், பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கேக் வெட்டி கொண்டாடினா். அப்போது, பரிசு பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் முதல்வா் அமலி பிரசில்லா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி மாணவா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
விழாவில் பேசிய பள்ளி முதல்வா், இந்த வெற்றி மாணவா்களின் எதிா்கால அறிவியல் ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானத்தின் மூலம் சாத்தியப்படுமா? என்று மாணவா்கள் கற்பனை திறன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனா் என்றும் தெரிவித்தாா்.
மாணவா்களின் சாதனை திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளிக்கும் பெருமை சோ்த்துள்ளதாகவும், மாணவா்களுக்கு உத்வேகம் கொடுத்த ஆசிரியா்களுக்கும், நிா்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினாா். பாராட்டு விழாவில் கல்வித் துறைத் தலைவா் பாபு மாதேஷ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.