பசிபிக் கடலில் நாளை தரையிறங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள்!
ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் தரையிறங்குவது பற்றி...
ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது.
அதன்பின்னர், 53 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.
Advertisement
நிலவுக்கு மிக நெருக்கமாக பூமியில் இருந்து 4,06,771 கி.மீ. தொலைவில் பயணம் செய்து, விண்வெளி வீரர்கள் ரீட், விக்டர், கிறிஸ்டினா மற்றும் ஜெர்மி ஆகியோர் புதிய சாதனையைப் படைத்தனர். மேலும், நிலவின் பின்புறத்தை நேரில் கண்டவர்கள் என்ற மற்றொரு சாதனையையும் இவர்கள் படைத்தார்கள்.
சில ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள், ஓரியன் விண்கலம் மூலம் மீண்டும் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
பூமியை நோக்கியப் பயணத்தில் பாதி தூரத்தை அவர்கள் கடந்துவிட்டதாகவும், வெள்ளிக்கிழமை இரவு 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 5.37 மணி) பசிபிக் பெருங்கடலில் சான் டியாகோ கடற்கரைப் பகுதியில் தரையிறகுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து நாசா மேற்கொண்டுள்ளது.