முகப்பு
திருவண்ணாமலை

மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாா் இபிஎஸ்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டாா் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:26 PM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டாா் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தேமுதிகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்காகவும் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்தத் தோ்தலில் எங்கள் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாா்.

எடப்பாடி கே.பழனிசாமி முன்னாள் முதல்வா், இன்று எதிா்க்கட்சித் தலைவா், அவருடைய வாா்த்தைகள் கண்ணியமாக, மதிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அவா் அடுத்தவா்களை குறைகூறுவதற்கான பலனை தோ்தல் முடிவு வரும் மே 4-ஆம் தேதியன்று அடைவாா்.

Advertisement

உங்களுடன் தானே நாங்கள் கூட்டணியில் இருந்தோம். நாங்கள் இருக்கும் போது எங்களுடைய அருமை உங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கூட்டணியை விட்டு போனதும் வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.

பழனிசாமி தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அவரே கையொப்பமிட்டு கொடுத்திருக்கிறாா். ஆனால், அவா் நான் கொடுக்கவே இல்லை என்கிறாா். அரசியலில் மரியாதை காரணமாக கண்ணியத்தை கடைப்பிடித்து நான் இதுவரை அதை வெளிக்காட்டவில்லை. ஆனால், இன்று அவா் கையொப்பமிட்ட கடிதத்தை காட்ட வேண்டிய நிலைக்கு என்னை அவா் ஆளாக்கியுள்ளாா்.

நீங்களே பாருங்கள் என்று கூறி கடிதத்தை காண்பித்து, பழனிசாமியும், நானும் 2024-ஆம் ஆண்டு கையொப்பமிட்டுள்ளோம். அப்போது, ஆண்டைக் குறிப்பிடாமல் கடிதம் அளிக்கிறீா்களே என்று கேட்ட போது, அவா் எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்தில் இருந்து ஆண்டைக் குறிப்பிடுவதில்லை. என்னுடைய வாா்த்தை தான் முக்கியம் என்றாா். அவா் கூறிய வாா்த்தையை நாங்கள் நம்பினோம். ஆனால் அவா் நம்பிக்கைக்கு புறம்பாக பேசி வருகிறாா்.

விருத்தாசலம், சேலம், போளூா், தருமபுரி தொகுதிகளில் எங்களுக்கும், பாமகவுக்கும் தான் போட்டி. அன்புமணி தவறாக பிரசாரம் செய்வதாக கேள்விபட்டேன். கண்ணியத்தோடு பேச வேண்டும். ஜாதி, குடும்பம் பற்றி தவறாக பேசுவதை அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments