ஐசியுவில் தேமுதிக! இபிஎஸ்ஸுக்கு பிரேமலதா கண்டனம்!
தேமுதிகவை ஐசியு கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தேமுதிகவை ஐசியு கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் "முன்னாள் முதல்வராக இருந்து இன்று எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர், அவருடைய வார்த்தைகள் கண்ணியமாகவும் மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும். அதனைவிடுத்து, ஏதோ ஒரு மூன்றாம்தர, நான்காம்தர பேச்சாளர்களைப் போன்று ஒரு முதல்வர் வேட்பாளர் பேசுவது கண்டிக்கத்தக்கது.
எங்களை கேப்டன் விஜயகாந்த், ராணுவக் கட்டுப்பாட்டுடன் வளர்த்துள்ளார். எங்கள் பிரசாரங்களில் தொகுதிகளுக்குத் தேவையானது மற்றும் முதல்வரின் அறிவிக்கைகளையும் மட்டும்தான் நாங்கள் சொல்கிறோம்.
Advertisement
அப்படியில்லாமல், ஒருவரை திட்டுவது அல்லது குறைசொல்வதன் பலனை, மே 4 ஆம் தேதியில் எடப்பாடி பழனிசாமி அடைவார்.
அரை சதவிகித வாக்கு என்று அவர் சொல்கிறார். அதனால் உங்களுக்கென்ன வயிறு எரிகிறது? அவர் வயிறு எரிவது, தமிழ்நாடு முழுவதும் தெரிகிறது.
ஒரு முதல்வர் வேட்பாளருக்கு இது அழகல்ல; நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.
எம்.பி. சீட்டுக்கு கையெழுத்து போட்டுத் தரவில்லை என அவர் கூறினார். அரசியலில் மரியாதை காரணமாக, கண்ணியத்தை கடைப்பிடித்து, அதனை நான் காட்டவில்லை. ஆனால், இன்று அதனைக் காட்டவேண்டிய நிலைக்கு அவர்தான் என்னைக் கொண்டு வந்திருக்கிறார்.
ஐந்து எம்.பி.யும் ஒரு மாநிலங்களவையும் தரப்படும் என்பதை அவரும் நானும் 2024-ல் கையெழுத்திட்டிருக்கிறோம். அப்படியென்றால், 2025-ல் அவர் கொடுத்திருக்க வேண்டும்.
என்னுடைய வார்த்தைதான் முக்கியம், அதை நம்புங்கள் என்று பழனிசாமி கூறினார். அவரை நாங்கள் நம்பினோம்.
ஆனால், அவர் நம்பிக்கைக்குப் புறம்பாக, இன்று ஏதேதோ பேசுகிறார்.
அவரைப்போல கீழ்த்தரமாகப் பேசுவதற்கு எங்களுக்கும் தெரியும். ஆனால், மரியாதையுடன் அரசியலை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அதிமுக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறியதை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களிலிருந்து கடைசித் தொண்டர்கள்வரையில் யாருமே விரும்பவில்லை.
எங்களை ஐசியு-வில் இருந்த கட்சி என்று பழனிசாமி சொல்கிறார். மே 4-ல் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அவர் ஐசியு-வுக்கு போகாமல் இருந்தால் சரி" என்று தெரிவித்தார்.