நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
முதல்வர் ஸ்டாலின் நாற்காலிக்கு அடியில் வந்து பதவி பெற்றவர் அல்ல என எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் நாற்காலிக்கு அடியில் வந்து பதவி பெற்றவர் அல்ல என எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "பல்லுக்கு அடங்காத வாயும், வாய்மைக்குக் கட்டுப்படாத சொல்லும் சபையில் என்றுமே நிலைத்ததில்லை.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் அந்திமக் காலங்களில், அவரை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருந்தார்கள் என்பதை நாடறியும்.
Advertisement
ஐந்து முறை முதல்வராகப் பயணித்தவர், 50 ஆண்டுகால அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர், பல்வேறு முதல்வர்களுக்கு நினைவிடங்களைக் கட்டித் தந்தவர், தமிழ்நாட்டில் பாதிக்கும்மேல் நினைவிடங்களைக் கட்டித் தந்த கலைஞரின் நினைவிடத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த நினைவிடத்துக்காக மகன் என்ற முறையில், சட்டப் போராட்டம் நடத்தி, இடத்தை வாங்கித் தந்தவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
அம்மையாரின் மறைவின்போது வாய்ப்பிருந்தும்கூட, மக்களால் தேர்வுசெய்யப்பட்டுத்தான் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கலைஞர் சொன்னார். அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்து, பதவியை கூவத்தூரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட தலைவர் அல்ல எங்கள் தலைவர்.
வார்த்தைகள் அளவுமீறினால், நாங்களும் வார்த்தைகளால் அளவுமீறத் தயாராக இருக்கிறோம். எந்தப் பந்தைக் கொண்டு நீங்கள் எறிகிறீர்களோ, அதே பந்து உங்கள் பக்கமும் திரும்பும்.
எங்கள் தலைவர் (மு.க. ஸ்டாலின்), அவரின் தலைவரை தலைவராகவும், அரசியல் குருவாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்" என்று தெரிவித்தார்.