எந்தக் கட்சியினராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தினால்..! - பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் கருத்து...
எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெண்களைத் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் மற்றும் பெண் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,
"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றுதான் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். நான் ஒரு பெண் என்ற முறையில் எந்த கட்சியாக இருந்தாலும், அதேபோல எந்தவொரு பெண்ணை விமர்சித்தாலும் அந்த பெண் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நிச்சயமாக ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசுபவர்கள் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். விமர்சித்தவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள்.
அதனால் பெண்களை இழிவுபடுத்துவதை யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாகத் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை, கண்டனத்தை பெண்கள் சார்பாக நான் முன்னெடுப்பேன். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பெண்களை மதிக்கும் ஒரு நாட்டில் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.