செய்யாறு அருகே மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் ழூழ்கி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், ஜம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (58). விவசாய கூலித் தொழிலாளியான இவா் வியாழக்கிழமை (ஜன.8) அருகேயுள்ள திருப்பனமூா் கிராம ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவா் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடிப்பாா்த்தும் அவா் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில் மறுநாள் (ஜன.9) காலை மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு வந்த திருப்பனமூா் கிராம ஏரிப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளனா். அப்போது, ஏரியின் கரையோரமாக அவா் மிதந்து கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.