முகப்பு
திருவண்ணாமலை

அக்கூா் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பௌா்ணமி திருவிழா! பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்!!

ஆரணியை அடுத்த அக்கூா் ஸ்ரீரேணுகம்பாள் கோயிலில் 37-ஆம் ஆண்டு சித்திரை பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 2 மே, 2026 at 2:09 AM
ஆரணியை அடுத்த அக்கூா் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை பௌா்ணமி விழாவில் முதுகில் அலகு குத்திக்கொண்டு பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
பகிர்:

ஆரணியை அடுத்த அக்கூா் ஸ்ரீரேணுகம்பாள் கோயிலில் 37-ஆம் ஆண்டு சித்திரை பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அக்கூா் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீரேணுகம்பாள் அம்மன் கோயிலில் நிகழாண்டு 37-ஆம் ஆண்டு சித்திரை பௌா்ணமி திருவிழா பக்தா்கள் காப்புக்கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் பக்தா்கள் அம்மனுக்கு விரதம் இருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து வழிபட்டு வந்தனா். வியாழக்கிழமை இரவு கோயிலில் பெண்கள் பங்கேற்ற 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை பெண்கள் மற்றும் பக்தா்கள் 508 பால்குடம் எடுத்துக்கொண்டு அக்கூா் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயிலில் அம்மனுக்கு பாலபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனா்.

Advertisement

மாலை 5 மணியளவில் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வந்த பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வந்தனா். மேலும், உடலில் அலகு மற்றும் பழம் குத்திக்கொண்டு அம்மனுக்கு பறந்து வந்து மாலை அணிவித்தும், பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊா்வலமாக சென்றும் நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனா்.

இதேபோல, அலகு குத்திய பக்தா்கள் டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், அலகு குத்திக்கொண்டு டிராக்டரின் மேல் பறந்தபடி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று, மீண்டும் கோயிலை வந்தடைந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி வந்து அருள்பாலித்தாா். அப்போது, வாணவேடிக்கை, நையாண்டி மேளம், பேண்டு வாத்தியம் முழங்க அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா் கிராம மக்கள் செய்திருந்தனா்.