ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரை கண்டித்து பாஜகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீதும் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடந்த இடத்தைப் பார்வையிட பாஜக வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன் தலைமையில் பாஜகவினர் அழிஞ்சிகுப்பம் கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை சென்றனர்.
அங்கு, தடியடியில் காயமடைந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்களுடன் இணைந்து, டாஸ்மாக் கடை முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் க. சிவப்பிரகாசம், மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.