போலி நகைகளை அடகு வைத்து ரூ.13.44 லட்சம் மோசடி: தனியார் நிதிநிறுவன மேலாளர் கைது
வேலூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 13.44 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 13.44 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர்-ஆரணி சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக வினோத்குமார் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர்.
அதன்படி, வேலூரைச் சேர்ந்த சிவசங்கரன், பாஸ்கர், சார்லி, சரண்ராஜ், சத்தியநாராயணன் ஆகியோர் 85 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 13 லட்சத்து 44 ஆயிரத்து 296 கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதனை செய்தபோது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. மேலும், போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற கிளை மேலாளர் வினோத்குமார் உடந்தையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனியார் நிதிநிறுவன அதிகாரி சத்தியமூர்த்தி வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை புதன்கிழமை கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.