குழந்தைகளுக்குப் பல் சொத்தையா? அலட்சியம் வேண்டாம்! காரணங்களும் தீர்வுகளும்...
சிறு குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி...
குழந்தைகளிடையே குறிப்பாக 2, 3 வயது குழந்தைகளிடையே பல் சிதைவு அல்லது பல் சொத்தை பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறும் மருத்துவர்கள், அதுபற்றிய விழிப்புணர்வையும் பெற்றோர்களிடையே மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளின் பால் பற்களில்(milk teeth) ஏற்படும் பல் சிதைவு அல்லது பல் சொத்தை பெரிய பிரச்னை இல்லை என்றும் அவை காலப்போக்கில் விழுந்து வேறு (நிரந்தர) பற்கள்தான் முளைக்கப் போகின்றன என்ற ஒரு போக்கு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. இது தவறானது என்றும் குழந்தைகள் என்றாலும் பல் சொத்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது புதிய(நிரந்தர) பற்களின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏன் ஏற்படுகிறது?
குழந்தைகளுக்கு இரவு பால் கொடுப்பதாலும் சர்க்கரை சேர்த்த உணவு / திரவங்களைக் கொடுப்பதால் பற்களில் பாக்டீரியாக்கள் உருவாகி அந்த சர்க்கரையை உண்டு, ஒரு படலத்தை உண்டுபண்ணுகின்றன. பற்களை சுத்தம் செய்யாதபோது இதுவே நாளடைவில் பல் சொத்தையாக மாறுகிறது என்று குழந்தைகள் பல் மருத்துவரான டாக்டர் பொன்னுதுரை அரங்கானல் கூறினார்.
Advertisement
Advertisement
குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதும் அல்லது புட்டிப்பால் கொடுப்பதும் பல் சொத்தையை ஏற்படுத்தலாம், இதில் தாய்ப்பாலைவிட புட்டிப்பால், பல் சொத்தையை ஏற்படுத்துவதற்கான அனைத்து காரணிகளையும் கொண்டுள்ளது.
இன்றைய குழந்தைகள் சாப்பிடும்போது அதிக நேரம் டிவி, போன் உள்ளிட்ட திரையைப் பார்ப்பதால், அதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக சாப்பிடும்போது அதுவும் பல் சொத்தைக்குக் காரணமாக அமைவதாகக் கூறுகிறார் சென்னை கிட்ஸ்டீன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் பல் மருத்துவ மையத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஹரிஹரன்.
பால் பற்கள் - நிரந்தர பற்கள்
இதுபற்றி டாக்டர் ஹரிஹரன் மேலும் கூறும்போது, "குழந்தைகளுக்கு மொத்தம் 20 பால் பற்கள் உள்ளன. அவை 6 மாதம் முதல் 24 மாதங்களில் முளைத்து, பின்னர் 6 முதல் 11 வயதில் விழ ஆரம்பிக்கின்றன. தாடையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அவை முக்கியப் பங்கு வகிப்பதால் இது முக்கியமனது.
12 வயதுக்கு முன் பால் பற்கள் விழுந்துவிட்டால், அவற்றிற்குப் பதிலாக நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும் என பெற்றோரிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் குழந்தைகளுக்கு 20 பால் பற்கள் மட்டுமே உள்ளன. மற்ற 12 பற்களும் ஒரு முறை மட்டுமே முளைக்கும் நிரந்தர பற்களாகும்.
அதாவது வாயின் மேல் தாடை, கீழ் தாடை என 4 பக்கங்களிலும் முறையே 3 கடவாய்ப் பற்கள் என 12 நிரந்தர பற்கள் உள்ளன. மற்ற 20 பற்கள் மட்டுமே விழுந்து முளைக்கின்றன. அதனால் அனைத்து பற்களும் விழுந்து முளைப்பதில்லை. நிரந்தர பற்கள் விழுந்தால் அவை திருப்பி முளைப்பதில்லை என்பதை பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். குழந்தைகள் புதிய வார்த்தைகளைக் கற்கும்போதும், சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு முன்னும் பற்கள் அவசியமாகின்றன" என்றார்.
பல் சொத்தை அறிகுறிகள்
பல் ஈறுகளுக்கு அருகில் அல்லது பற்களில் வெள்ளை நிற, சுண்ணாம்பு போன்ற கோடுகள் இருந்தால், அது பற்களில் தாதுக்கள் குறைவதற்கான அறிகுறியாகும். பல் சிதைவு அதிகரிக்கும்போது இந்த வெள்ளைப் புள்ளிகள்/ கோடுகள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறக் கூடும். இதுவே பல் சொத்தையாகும்.
இதனால் எரிச்சல், தூங்குவதில் சிரமம், மெல்லும்போது அசௌகரியம், சில நேரங்களில் அந்த இடங்களில் வலி ஏற்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் தூங்கும் முன்பாக பால், பழச்சாறு, சர்க்கரை நிறைந்த திரவங்களைக் கொடுத்தபிறகு தண்ணீர் கொடுக்க வேண்டும். இரவில் தண்ணீர் மட்டுமே கொடுப்பது நல்லது. இல்லையெனில் வாயைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு போதிய பற்கள் முளைத்தது முதலே அவர்களுக்கேற்ற பிரஷ் கொண்டு சுத்தம் செய்வது அவசியம். குழந்தைகளுக்கான பல் மருத்துவரையும் அவ்வப்போது அணுகி ஆலோசனை பெற வேண்டும். பல் மருத்துவர்கள் அவ்வப்போது பற்களில் ஃப்ளூரைடு, பற்சிதைவைத் தடுக்கும் சீலன்ட்களையும் பரிந்துரைக்கின்றனர். இது பற்சிதைவைத் தடுக்கும் என்று டாக்டர் ஹரிஹரன் கூறுகிறார்.
பல் மூன்று அடுக்குகளால் ஆனது. எனாமல் (பாதுகாப்பான கடினமான வெளிப்புற அடுக்கு), டென்டின் (உணர்திறன் மிக்க உட்புற அடுக்கு) மற்றும் பல்ப் (நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களைக் கொண்ட மிக உட்புற மையப் பகுதி).
வாயில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் உள்ளன. உணவுகளில் உள்ள துகள்கள் மூலமாக உருவாகும் அமிலம் பல் கூழ்மத்தை அரித்துவிடும். பல் சிதைவு ஆரம்ப நிலையில் இருந்தால் அதனை எளிதாக சரிசெய்ய முடியும். அதிகமாக இருந்தால் பல் வேர் சிகிச்சை தேவைப்படும்.
குழந்தைகளுக்கு, குறிப்பாக 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பல் வேர் சிகிச்சை செய்வது எப்போதும் சவாலானது, ஏனெனில் குழந்தைகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பது சவாலானது. அத்தகையசூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து மூலமாக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.