ஓட்டேரியில் ரூ. 50 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு திறப்பு
வேலூர் ஓட்டேரியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
வேலூர் ஓட்டேரியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இதன் மூலம், நாளொன்றுக்கு 5 டன் குப்பைகளை உரமாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜயகுமார் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் தினமும் 200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இக்குப்பைகள் சதுப்பேரி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து சதுப்பேரியில் குப்பைக் கொட்ட தடை விதிக்கப்பட்டது.
பின்னர், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரங்களாகவும், மக்காத குப்பைகளை மறுஉபயோகத்துக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக மாநகராட்சி முழுவதும் 36 இடங்களில் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகள் அமைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, கூடுதலாக 6 இடங்களில் ரூ. 7 கோடி செலவில் குப்பைகளை அரைக்கக்கூடிய நவீன இயந்திரங்களுடன் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகள் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இதில், ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்குப் பணிகள் நிறைவுப் பெற்றதை அடுத்து அதை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜயகுமார் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் நாளொன்றுக்கு 5 டன் கழிவுகளை உரமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், 3-ஆவது மண்டல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.