திமுகவுக்கு இது கடைசித் தேர்தல்: இபிஎஸ் பேச்சு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்தான் திமுகவுக்கு கடைசித் தேர்தல் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்தான் திமுகவுக்கு கடைசித் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 11) விமர்சித்தார்.
திமுக கூட்டணியில் ஒத்தக் கொள்கை உடைய கட்சிகள் இல்லை என்றும், திமுக ஆட்சி இந்தத் தேர்தலுடன் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். இந்தத் தேர்தல்தான் கருணாநிதி குடும்பத்துக்கு கடைசித் தேர்தல்.
திமுக கூட்டணியில் ஒத்த கொள்கை உடைய கட்சிகள் இல்லை. வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள்தான் திமுக கூட்டணியில் உள்ளன. ஆனால், ஒரே கொள்கை உடையவர்கள் இணைந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் எல்லா மேடைகளிலும் பொய் கூறி வருகிறார். கூட்டணி அமைக்கும் கட்சிகள் திமுகவிடம் அடிமையாக உள்ளன.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.
விவசாயிகள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். டெல்டா விளை நிலங்களை அபகறிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி.
விவசாயிகள் வசதிக்காக காவிரி - குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். அதனை முடக்கியது திமுக அரசு. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், நடந்தாய்வாழி காவிரி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tiruchy NDA alliance conference This is the last election for DMK: EPS speech