தமிழகத்திலேயே முதல்முறையாக திருவள்ளுவர் பல்கலை.,யில் நாடக வழி கற்பித்தல் முறை அறிமுகம்: துணைவேந்தர் க.முருகன்
சர்வதேச நாடுகளில் மிகப் பிரபலமான கல்வி முறையான நாடக வழி கற்பித்தல் முறையை தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களிலேயே
சர்வதேச நாடுகளில் மிகப் பிரபலமான கல்வி முறையான நாடக வழி கற்பித்தல் முறையை தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களிலேயே முதல்முறையாக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அதன் துணைவேந்தர் க.முருகன் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் "நாடக வழி கற்பித்தல் முறை பயிற்சி' என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்து துணைவேந்தர் க.முருகன் பேசியதாவது:
சர்வதேச நாடுகளில் மிகப் பிரபலமான கல்வி முறையான நாடக வழி கற்பித்தல் முறை தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் முதல்முறையாக திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கற்பித்தல் முறை பயிற்சியை நிகழ் நாடக மன்ற நிறுவனரும், திரைப்பட நடிகருமான எம்.சண்முகராஜா அளிக்க உள்ளார். இதன் மூலம் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற 128 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் போராசிரியர்கள் கற்பித்தல் பணியை எளிமையாக்கவும், மாணவர்கள் கற்றலை மகிழ்வான தருணமாக மாற்றவும் முடியும் என்றார் அவர்.
நிகழ் நாடக மன்ற நிறுவனரும், திரைப்பட நடிகருமான எம்.சண்முகராஜா பேசியதாவது:
நாடக வழி கற்பித்தல் முறை என்ற கல்வி முறையை "தியேட்டர் பேடாகோகி' என்று அழைக்கப்படுகிறது. இக்கல்வி முறை இந்தியாவுக்கு புதிது. இதற்கு முன் சென்னை லயோலா, பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரம் பேராசிரியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒரு ஆசிரியரை படைப்பாளியாக உருவாக்குவதன் மூலம் மாணவர்களையும் சக படைப்பாளியாக மாற்ற முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இக்கற்பித்தல் முறை சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மிகப் பிரபலம். இந்தியாவில் திரிபுராவில் செயல்பட்டு வரும் தேசிய நாடகப் பள்ளியில் மட்டும் ஓராண்டு கல்வியாகக் கற்பிக்கப்படுகிறது. இங்கு வடகிழக்கு மாணவர்கள் மட்டுமே சேர்ந்து பயிலக் கூடிய நிலை உள்ளது. இக்குறையைப் போக்கும் விதமாக நிகழ் நாடக மையம் சார்பில் தமிழகத்தில் இந்தக் கற்பித்தல் முறையைக் கொண்டு செல்லும் நோக்கில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள 645 கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற வழி ஏற்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி முன்னிலை வகித்தார். பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர் ம.செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்த் துறைப் பேராசிரியர் ஜெகதீசன், சிங்காரவேலு, உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் அ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.