நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!
நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க தமிழக அரசு உதவி எண் தொடங்கியது குறித்து...
நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க, தமிழக அரசு சார்பில் இலவச உதவி எண் தொடங்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (மே 1) தலைமைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த குறிப்பிட்ட பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்), தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்காக, 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைபேசி சேவையைத் தொடங்கியுள்ளது.
Advertisement
மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின்கீழ் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலோசனை தேவைப்படும் மாணவர்களும் பெற்றோர்களும், இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு 14416 அல்லது 104 என்ற உதவி எண்களைத் தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படும் இந்தச் சேவை, பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் கையாளப்படுகிறது.
இந்திய அளவில் மொத்தம் 22.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ள இந்தத் தேர்வில், தமிழகத்தைச் சார்ந்த 1.5 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.