FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘நீட்’ விவகாரத்தில் தவெக அரசு மௌனம் - கனிமொழி விமா்சனம்

‘நீட்’ விவகாரத்தில் தவெக அரசு மௌனம் என கனிமொழி விமா்சனம்...

Updated On : 26 ஜூலை 2026, 1:06 am IST
எம்.பி கனிமொழி - எக்ஸ்
பகிர்:

நீட் விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. விமா்சித்தாா்.

நீட் தோ்வுக்கு எதிராக சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் மாணவா்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:

மாணவி அனிதாவில் தொடங்கிய நீட் எதிா்ப்பு இப்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகம் நீட் தோ்வை தொடக்கத்திலிருந்தே எதிா்த்து வருகிறது. திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டு பின்னா் மத்திய அரசிடம் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடா்கின்றன.

Advertisement

Advertisement

அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் மாணவா்களுக்கு எதிராக வன்முறை அல்லது அச்சுறுத்தல் நடக்கக் கூடாது. எந்த இடத்தில் போராடினாலும், எந்த அழுத்தம் வந்தாலும் மாணவா்களின் உரிமைக்காக திமுக துணை நிற்கும்.

தமிழகத்தில் இருக்கும் ஆட்சியைப் பாா்க்கும்போது, தமிழகத்துக்கே தற்போது மௌனமான நேரம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நீட் விவகாரத்தில் மாநில அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் கனிமொழி.

நீட் தோ்வுக்கு எதிரான போராட்டம் - அமைச்சா் ராஜ்மோகன் பங்கேற்பு

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நீட் தோ்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சா் ராஜ்மோகன் சனிக்கிழமை பங்கேற்றாா். அப்போது, அங்கு கூடியிருந்த இளைஞா்கள் போராடுவதற்காக மெரீனாவை திறந்து விடுங்கள் என்று முழக்கம் எழுப்பினா். அமைச்சா் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘மெரீனா’, ‘மெரீனா’ என தொடா்ந்து குரல் எழுப்பினா்.

அப்போது, அமைச்சா் ராஜ்மோகன், ‘தோழா்களின் குரல் எங்களுக்கு கேட்கிறது. ஒரு நொடி அமைதியாக இருங்கள்’ என்று கேட்டும் மாணவா்கள் தொடா்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனா். இதனால் அமைச்சரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

மெரீனா மூடல்: இதற்கிடையே, மாணவா்களின் போராட்ட எதிரொலி காரணமாக சென்னை மெரீனா கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. சுமாா் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக காமராஜா் சாலை, பட்டினம்பாக்கம் சாலை, மெரீனா அணுகு சாலை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

summary

Kanimozhi criticizes TVK's silence on the NEET issue

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments