புத்தாண்டுக்கு விடுப்பு எடுத்தவர்களை பணிநீக்கம் செய்த தனியார் பால் நிறுவன நிர்வாகத்தைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சாலை முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபேட்டையை அடுத்த முசிறி அருகே தனியார் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம், பால் கவர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவை இயங்கி வருகின்றன. பால் கவர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்கு (ஜன.1) விடுப்பு கேட்டு, மறுக்கப்பட்ட நிலையில், அன்று அனைவரும் விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிர்வாகத்தினர் கடந்த 2 நாள்களாக தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் அலைக்கழித்ததாகத் தெரிகிறது. மேலும், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிறுவன அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்தத் தொழிலாளர்கள்
தெரிவித்தனர்.