டெங்கு காய்ச்சல் பரவும் வகையில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தாமல் வைத்திருந்த வேலூா் தனியாா் மருத்துவமனை கட்டட ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.10,000-ம் அபராதம் விதித்தது.
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வேலூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் மாநகராட்சிப் பகுதி முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சி 2-ஆவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் வேலூா்-ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, அடுக்குமாடி கட்டடம் கட்டும் இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆய்வு செய்யப்பட்டதில், இரு இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்டடத்தின் ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10,000-ம் அபராதம் விதித்து, இதேபோல் மீண்டும் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.