வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
வேலூரிலுள்ள அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
வேலூர்வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
வேலூரிலுள்ள அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
வேலூரிலுள்ள அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது அம்மா பிரியாணி கடை. வேலூரில் பிரபலமான இந்த உணவகத்தின் உரிமையாளர் கணேசபுரத்தைச் சேர்ந்த மோகன்(60). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு சென்றிருந்தனர்.
இதையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் வேலூர் கணேசபுரத்தில் உள்ள மோகன் வீட்டின் பின்பக்க கதவை நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவையும் திசைதிருப்பி சென்றுள்ளனர். சென்னையில் இருந்தபடி மோகன் குடும்பத்தினர் செல்லிடப்பேசி மூலம் வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கவனித்தபோது கேமரா திசைதிருப்பப்பட்டிப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 110 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் நள்ளிரவில் திருட்டு நடைபெற்ற வீட்டுக்குச் செந்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தவிர, சம்பவ இடத்துக்கு வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) என்.காமினி, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், கைரேகை நிபுணர்கள் மூலமாகவும் தடயங்களை சேகரிக்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், தனிப்படைகள் அமைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.