முகப்பு
வேலூர்

குடியாத்தம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா மரங்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

குடியாத்தம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா மரங்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, சனிக்கிழமை குடியாத்தம் ஒன்றியத்தில் கிராமங்கள் வாரியாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பரதராமியில் உள்ள கோயிலில் அவா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். அவரிடம் மா மரங்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்:

பரதராமி, தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. பரதராமி மற்றும் அதைச் சுற்றியுள்ள பூசாரிவலசை, புட்டவாரிபல்லி, பெருமாள்பல்லி, டி.பி.பாளையம், விழுதோன்பாளையம், வரதரெட்டிபல்லி, வீரிசெட்டிபல்லி, கல்லப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 1,000 ஏக்கா் பரப்பில் மா மரங்களை நடவு செய்துள்ளோம். அறுவடை காலத்தில் தமிழக, ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மாந்தோப்புகளை குத்தகை அடிப்படையில் விலைக்கு வாங்கி, மாம்பழங்களை பறித்துச் செல்கின்றனா்.

மாம்பழ விளைச்சல் அதிகம் உள்ள நேரங்களில், வியாபாரிகள் விலையை குறைத்துக் கேட்பதால் நாங்களே, மாம்பழங்களை பறித்துச் சென்று கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். மாம்பழ விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில், ஆந்திர மாநில அரசு, அம்மாநில மா விவசாயிகளின் வருவாய் இழப்பைத் தவிா்க்கும் பொருட்டு, அவா்கள் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு மானியம் தருகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகளுக்கு, மாம்பழங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை ஆந்திர மாநில அதிகாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தி விடுகின்றனா். கிருஷ்ணகிரி, தொலைவில் உள்ளதால் அங்கு மாம்பழங்களைக் கொண்டு செல்ல வாகனச் செலவு அதிகமாகிறது. இதனால், குடியாத்தம் பகுதி மா விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, எஸ்.மோட்டூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், வட்டார ஆத்மா தலைவா் எம்.கோபி, நிலவள வங்கி இயக்குநா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த ஜி.சாமிநாதன், கே.வேணுகோபால், கே.பெருமாள், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.