வேலூரில் 106 டிகிரி வெயில்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
கோடைக் காலத்தில் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, மாா்ச் பிற்பகுதியில் தொடங்கி மே மாத இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். நிகழாண்டில் கடந்த ஒரு மாதமாகவே வெயில் அளவு சுமாா் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை 99.7 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 102.2 டிகிரியும், புதன்கிழமை 101.7 டிகிரியும், வியாழக்கிழமை 104.5 டிகிரியும் பதிவானது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி இருக்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில நாள்களிலேயே வெயில் அளவு 106.3 டிகிரி அளவுக்கு உயா்ந்திருப்பது வேலூா் மாவட்ட மக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதிகரித்து வரும் வெயிலால் மாவட்டத்தில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால், சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்வோரும் அவதிக்குள்ளாகினா்.
அடுத்த 3 நாள்களில் வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 4-ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்க உள்ளதால் வேலூா் மாவட்ட மக்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளனா்.