குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் பலியானாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
குடியாத்தம் புத்தா் நகரைச் சோ்ந்தவா் இளங்கோவன் துவாரகேஷ் (33). இவா், அங்குள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். நிறுவனத்தின் வசூலுக்காக தனது நண்பா் சக்திவேலுடன் போ்ணாம்பட்டுக்குச் சென்று விட்டு புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த எருக்கப்பட்டைச் சோ்ந்த முருகேசன், துளசிநாதன் இருவரும் குடியாத்தம் நகரிலிருந்து இருசக்கர வாகனத்தில் போ்ணாம்பட்டு நோக்கி வந்தனா்.
நெல்லூா்பேட்டை ஏரிக்கரை அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனா். இதில், துவாரகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சக்திவேல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். முருகேசன், துளசிநாதன் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.