ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் 12 ஆம் எண் கொண்ட ஜெர்ஸிக்கு ஓய்வளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதைப் பற்றி...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் 12 ஆம் எண் கொண்ட ஜெர்ஸிக்கு ஓய்வளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு அணிகளும், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ஆண்ட்ரே ரஸ்ஸலை கௌரவிக்கும் விதமாக, அவரின் 12 என்ற எண் அச்சிட்ட ஜெர்ஸிக்கு ஓய்வளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர்கள் பட்டாளத்தில் முதன்மையானவரான ஆண்ட்ரே ரஸல், ஜூலை 23 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
ஐபிஎல் தொடரில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், தன்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்காததால் திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல்லில் இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஸல், கேகேஆர் அணிக்காக மட்டும் 133 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 2651 ரன்கள் எடுத்திருக்கிறார்.
கொல்கத்தா அணியினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்கும் நைட்ஸ் அன்ப்ளக்டு நிகழ்ச்சி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தா தலைமை நிர்வாகச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரஸ்ஸலை கௌரவிக்கும் விதமாக, ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸி ஓய்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரிங்கு சிங்கைத் தங்களது அணியின் துணை கேப்டனாக கொல்கத்தா அணி நியமித்தது.
கடந்த சீசனில் எட்டாவது இடத்தைப் பிடித்த முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி மீண்டும் எழுச்சிப் பெரும் முனைப்பில் மிகத்தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
கொல்கத்தா அணி மார்ச் 29 ஆம் தேதி வான்கடே திடலில் நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.