காலமானாா் ஜூடோ கே.கே.ரத்தினம்
திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்தினம் (93) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (ஜன. 26)மாலை வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்தினம் (93) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (ஜன. 26)மாலை வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்த இவா், திரைப்படத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவா். 1959- இல் முதலாவதாக தாமரைக்குளம் என்ற படத்துக்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினாா்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினாா்.
Advertisement
இவா் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, பாயும்புலி, நெற்றிக்கண், நல்லவன் உள்ளிட்ட படங்கள் சாதனை படைத்தன. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கிராப்தா் படத்துக்கும் இவா் சண்டைப் பயிற்சி அளித்தாா். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவா், சில திரைப்படங்களில் நடித்துள்ளாா்.
இவருக்கு 3 மகன்கள், 5 மகள்கள் உள்ளனா். இவரது மகன் ராமு திரைத்துறையில் சண்டைப் பயிற்சியாளராகவும், பகத்சிங் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனா். குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், அவரது கண்கள் வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
இவரது உடல் திரைத் துறையினா் அஞ்சலி செலுத்த வெள்ளிக்கிழமை காலை சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு, வடபழனியில் உள்ள திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் மையத்தில் வைக்கப்படும். இரவு குடியாத்தம் கொண்டு வரப்பட்டு, சுண்ணாம்புபேட்டை மயானத்தில் சனிக்கிழமை (ஜன. 28) அடக்கம் செய்யப்படும்.