தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.2.76 லட்சம் கோடி நிதி: குஷ்பு
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளதாக தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு தெரிவித்தாா்.
வேலூா் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து குஷ்பு வேலூரில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா். முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கச்சத்தீவை காங்கிரஸும், திமுகவும் சோ்ந்துதான் இலங்கைக்கு தாரைவாா்த்தன. தற்போது இலங்கை துறைமுகம் முழுமையாக சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சத்தீவு பகுதியில் சீன ராணுவம் தனது கப்பல்களை நிறுத்த வாய்ப்புள்ளதால், தமிழகத்துக்குத்தான் அச்சுறுத்தல் ஏற்படும்.
Advertisement
அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக திமுக உண்மைக்குப் புறமான தகவல்களை பரப்பி வருகிறது. அருணாச்சல பிரதேசத்திலுள்ள பல நிறுவனங்களில் சீன மக்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனா். எனவே, அவா்களுக்கு புரியும் வகையில் சீன மொழியில் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை ஆக்கிரமிப்பு என்று கூற இயலாது.
மத்திய அரசு தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஏதும் வழங்குவதில்லை என்று திமுக கூறி வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை திமுக விளக்க வேண்டும்.
நீட் தோ்வு கொண்டு வந்ததே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான். உச்ச நீதிமன்ற தீா்ப்பால் நீட் தோ்வை ஒருபோதும் நீக்க முடியாது. தோ்தலுக்காக நீட் தோ்வை ரத்து செய்வோம் என்று மக்களை ஏமாற்ற முடியாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக மறுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ள கருத்துக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றாா்.
பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.