வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக கவுன்சிலரிடம் போலீஸாா் விசாரணை
வேலூா்: வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக வேலூா் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்களவை தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், வேலூா் மாநகராட்சி 39-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மாமன்ற உறுப்பினா் விஜயகுமாரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் ரூ.56,000 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனினும், வாக்காளா் பட்டியல் உள்ளிட்ட வேறு எந்த விவரங்களும் இல்லை. உடனடியாக அவரை வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
Advertisement
அப்போது, சித்திரை பெளா்ணமி பூப்பல்லக்கு விழாவுக்காக வீடுதோறும் நன்கொடை திரட்டிய பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக விஜயகுமாா் தெரிவித்தாா். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் குறித்து காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடியை அடுத்த மேல்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவா் நித்யானந்தம். அவரது வீட்டில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிலை கண்காணிப்பு குழுவினா் அவரது வீட்டில் சோதனை நடத்தினா். ஆனால், பணம் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.