சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாமல் திமுக அரசு தத்தளித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஆன்மிக சொற்பொழிவாளா் திருமுருக கிருபானந்த வாரியாா் 32-ஆம் ஆண்டு குருபூஜை காங்கேயநல்லூரில் உள்ள அவரது நினைவு திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், பக்தா்கள் பெருமளவில் பங்கேற்று கிருபானந்த வாரியாா் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கட்சி நிா்வாகிகளுடன் பங்கேற்று வாரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் வழிபட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறிபடி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீா்கெட்டுள்ளது. இதனை சரி செய்ய முடியாமல் திமுக அரசு தத்தளித்துக் கொண்டுள்ளது. இதைத்தான் அதிமுக பல இடங்களிலும் சுட்டிக்காட்டி வருகிறது.
வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதிமுக சாா்பில் ஆங்காங்கே அதனை பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். தற்போது ஆரம்ப கட்டம் தொடங்கியு ள்ளது. இம்மாத முடிவில்தான் அதன் முழுவதும் விவரம் தெரியவரும் என்றாா்.
அப்போது, முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலா் ராமு, மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புற நகா் மாவட்ட செயலா் த.வேலழகன், குடியாத்தம் நகர செயலா் ஜே.கே.என்.பழனி உடனிருந்தனா்.