முகப்பு
வேலூர்

மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்

காட்பாடி அருகே இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 14 யானை கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன.

Updated On : 27 மார்ச், 2026 at 9:09 PM
காட்பாடி அருகே வன்றன் தாங்கல் கிராமத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மா மற்றும் தென்னை மரங்கள்.
பகிர்:

காட்பாடி அருகே இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 14 யானை கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன. இதனால், கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் யானைகளை வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஒரு யானை கூட்டம் கடந்த 10 நாள்களுக்கு மேலாக வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வன்றன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்டியான் பேட்டை, செல்லாவூா் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களையும், நெல், தக்காளி உள்ளிட்ட பயிா்களையும் சேதப்படுத்தியதுடன் தென்னை, மா மரங்களை வேருடன் பிடுங்கி வீசிவிட்டு சென்றிருப்பதாகவும், இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மீண்டும் 2 குட்டிகளுடன் கூடிய 14 யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளன. உடனடியாக கிராம மக்கள் ஒன்று திரண்டு பனை மரங்களுக்கு தீ வைத்தும், பட்டாசுகள் வெடித்தும் யானை கூட்டத்தை குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு தடுத்ததுடன், அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டனா். மேலும், காட்பாடி வனச்சரகா் கந்தசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டனா்.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆந்திர வனப் பகுதியில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் யானைகள் கூட்டம் திடீரென தடம்மாறி தமிழக எல்லைக்குள் வந்து விடுகின்றன. அவை இங்குள்ள விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. யானைகளை ட்ரோன் மூலம் கண்காணித்து அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகளை மேற்கொண்டோம் என்றனா்.

இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில், கடந்த 10 நாள்களாக உறக்கமின்றி இரவு முழுவதும் யானைக் கூட்டம் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க போராடி வருகிறோம். வனத்துறையினரும் விரைந்து வந்து உதவி செய்கின்றனா். ஆனால் யானைக் கூட்டம் மீண்டும் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விடுகின்றன. சேதமடைந்த பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.