கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
கோவையில் தாயைப் பிரிந்த குட்டியானையை ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம், வனத்துறை முயற்சி தோல்வியடைந்தது.
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்தது.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி அதிகாலை, கந்தவயல் தற்காலிக சோதனைச் சாவடி அருகே ஆதரவற்ற நிலையில் யானைக் குட்டி ஒன்று அலைந்து திரிந்து கொண்டு இருந்தது.
உடனடியாக ‘களத்தில்’ இறங்கிய மீட்புக் குழுவினர், ட்ரோன்கள் மூலம் தாய் யானைக் கூட்டத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை 3 மணியளவில் ஒரு யானைக் கூட்டம் தென்பட, குட்டி யானையை லாவகமாக வழி நடத்திச் சென்று கூட்டத்தின் அருகே விட்டனர். இரவு முழுவதும் தெர்மல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் கண்காணித்து வந்தனர். குட்டி பாதுகாப்பாக இருக்குமெனக் கருதப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், அடுத்த நாள் ஏப்ரல் 26-ஆம் தேதி நிலைமை மாறியது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நீர்நிலைக்கு அருகே தென்பட்ட யானைக் கூட்டத்தைத் தஞ்சம் அடைய முயன்ற குட்டியை, அங்கு இருந்த ஒரு ஆண் யானை ஆக்ரோஷமாக விரட்டி அடித்தது.
கூட்டத்தால் விரட்டப்பட்ட குட்டி, திக்கற்ற நிலையில் நீர்நிலைக்கு அருகிலேயே நின்றது. இதனை அடுத்தும் தளராத வனத்துறையினர், வேறொரு முகாமுக்கு அருகே மீண்டும் சேர்ப்பதற்கு திட்டமிட்டு முயற்சி செய்தனர்.
மூன்றாவது நாளான இன்று, வனவிலங்குகளுக்கு ஓடந்துறை பகுதியில் வனத்துறையினர் அமைத்து உள்ள தொட்டியில் குட்டியை நிறுத்தி வைத்து யானைக் கூட்டத்தின் வருகைக்காக வனத்துறை அதிகாரிகள் காத்து இருந்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் மற்றுமொரு கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்கும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்தது. கூட்டத்துடன் சிறிது நேரம் இருந்த போதிலும், மீண்டும் அது விரட்டப்பட்டதால் களப்பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்சமயம் அந்த யானைக் குட்டி வனத்துறை கால்நடை மருத்துவர்களின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
யானைக் கூட்டம் ஒன்றுடன் குட்டியைச் சேர்க்கும் வரை வனத்துறையினர் முயற்சி தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Forest department's efforts to save a baby elephant separated from its mother in Coimbatore have failed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.