முகப்பு
கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 27: "தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஈரோட்டில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ஈரோடு

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:47 PM
பகிர்:

ஈரோடு, டிச. 27: "தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஈரோட்டில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர தூய்மைப் பணியாளர் சங்க மாநாடு ஈரோடு நகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய தொழிற்சங்க சம்மேளன மாநிலத் தலைவர் ஈவிகே.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர்.கணேஷ், நிர்வாகிகள் எம்.மாரப்பகவுண்டர், எம்.கே.முஸ்தபா, எஸ்.குருராஜ், குருசாமி, ஆறுமுகம், சித்துராஜ், பெருமாள், குணசேகரன் பேசினர்.

Advertisement

"துப்புரவுத் தொழிலாளர்களை தூய்மைப்பணி தொழிலாளர்கள் என்று அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு ஆணை வெளியிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு 6 மணி நேர வேலை, அரசு குடியிருப்பு வசதிகள், வீட்டுமனைப் பட்டா, சலவைப்படி, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதி செய்து தர வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து அரசு விடுமுறைகளையும் மறுக்காமல் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகளில் கொத்தடிமைகளைப்போல் தூய்மைப் பணியாளர்களிடம் கையொப்பம் பெறும் முறையைக் கைவிட வேண்டும். கல்வித் தகுதிச் சான்று கொடுத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

விழாக்காலங்கள், விடுமுறைக் காலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 480 நாள்கள் பணியாற்றிய அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நடைமுறைக்கு மாறாக பணிமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தி, சத்துணவு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டம், போனஸ் வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதைத் தவிர்த்து, சட்டப்படியான பணி நிரந்தரம், ஊதியம், சலுகைகள், ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.  ஈரோடு மாநகராட்சி தளவாடப் பொருள்கள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, எலவமலை ஊராட்சி, சித்தோடு பேரூராட்சி, லக்காபுரம் ஊராட்சி, 46புதூர் ஊராட்சி ஆகியவற்றை இணைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments