எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவரது புகைப்படத்தைக் காட்டிப் பேசிய உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலங்குடி வேட்பாளர் எம்.எல்.ஏ மெய்யநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் விதமாக சசிகலா காலில் அவர் விழும் புகைப்படத்தை மக்களிடம் காட்டிப் பேசிய உதயநிதி, “இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யாரென்று தெரிகிறதா? இவர்தான் திரு. எடப்பாடி பழனிசாமி. இதுதான் அவரது அரசியல் அனுபவம். இந்த அனுபவம் நிச்சயமாக என்னிடம் கிடையாது. யார் காலிலும் விழுந்து பதவி வாங்கும் அனுபவம் எனக்கு கிடையாது. சங்கி கூட்டத்துக்கு பயப்படும் அனுபவமும் எனக்கு கிடையாது. நான் எப்போதும் மக்களோடு மக்களாக நிற்பேன். சுயமரியாதைக்காக நிற்பேன்.
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடிபோல என்று. அதுபோல, மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாட்டியிருக்கிறார். பாஜகவை நாம் தமிழகத்தில் நுழையவிடமாட்டோம் என்பதால் அதிமுக என்ற போர்வையைப் போற்றிக்கொண்டு பாஜக தமிழகத்திற்குள் நுழையப் பார்க்கிறது. தில்லியிலிருந்து எடப்பாடி பழனிசாமி என்ற ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழ்நாட்டை கண்ட்ரோல் செய்யப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு என்றும் பாஜகவுக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ (கட்டுப்படாது) என்பதை நாம் சட்டமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம். அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்று பேசியுள்ளார்.
Edappadi's Political Experience: Udhayanidhi's Criticism!