ரம்மியமான சுற்றுலா தலமாகிறது உடுமலை!
உடுமலை,ஏப்.23: சுற்றுலா தலங்களில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது உடுமலைப்பேட்டை. இதை அடுத்துள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை மற்றும் சின்னார் வனப்பகுதி ஆகியவை இந்த ஆண்டில் கோடை விடுமுறைக்கு தயா
உடுமலை,ஏப்.23: சுற்றுலா தலங்களில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது உடுமலைப்பேட்டை. இதை அடுத்துள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை மற்றும் சின்னார் வனப்பகுதி ஆகியவை இந்த ஆண்டில் கோடை விடுமுறைக்கு தயாராகி வருகிறது.
உடுமலையில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் உள்ள திருமூர்த்திமலை கோவை மாவட்டத்தில் மிகப் பெரிய சுற்றுலாதலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ இங்கு அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள திருமூர்த்தி அணையில் ரம்மியமான படகு போக்குவரத்து சுற்றுலா பயணிகளுக்கு பெரிய விருந்தாகும். இதுபோக குழந்தைகளுக்கு அழகிய நீச்சல் குளமும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் பூங்காவும் மிகப் பெரிய பொழுது போக்கு அம்சங்களாக உள்ளன.
குறிப்பாக மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணம் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிப்பதற்காகவே பிற மாவட்டங்கள் ஏன் பிற மாநிலங்களில் இருந்து கூட சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம். முக்கியமாக திருமூர்த்தி அணையை ரசிப்பதற்காகவும் ஏராளமானோர் அன்றாடம் இங்கு வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடை விடுமுறை துவங்கி விட்ட நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
அமராவதி அணைப் பகுதி: உடுமலையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள அமராவதிஅணை சுற்றுலாப் பயணிகளை மிகவும் அதிக அளவில் கவர்ந்து
வருகிறது. அணைக்கு முன்பு ரம்மியமாக அமைந்துள்ள அழகிய பூங்காவும், சிறுவர் பூங்காவும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் உள்ளன. முக்கியமாக இங்குள்ள முதலைப் பண்ணை சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும் ஒரு அம்சமாக விளங்கி வருகிறது. ஒரு வயது முதல் 30 வயதுள்ள பல்வேறு வகையான முதலைகள் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு இராணுவ பள்ளியும் அமராவதி நகரில்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சின்னார் வனப்பகுதி: அமராவதி நகரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சின்னார் வனப் பகுதி. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த சிóன்னார் வனப் பகுதியில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், வரையாடுகள் என அரிய வகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வன விலங்குகளை அவைகள் வாழும் பகுதிலேயே அதாவது வனத்திலேயே நேரில் பார்த்து ரசிக்கும் சூழ்நிலைகள் இங்குள்ளன. அதற்காக உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிலேயே வாட்ச் டவர்கள் (பார்வை மாடம்) அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து கொண்டு வன விலங்குகளை அருகிலேயே பார்த்து ரசிக்கலாம். மேலும் வனப் பகுதிக்குள் வனத்துறையின் அனுமதியுடன் ட்ரக் கிங் செல்லலாம். கொள்ளை கொள்ளும் இயற்கையின் அழகை பார்த்து ரசிக்கலாம்.