சட்ட சிக்கல்களை கவனிக்காமல் நடவடிக்கை?
கோவை, ஜன. 8: கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததில் சட்டச் சிக்கல்கள் கவனிக்கப்படவில்லை என்று, மாவட்ட நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்
கோவை, ஜன. 8: கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததில் சட்டச் சிக்கல்கள் கவனிக்கப்படவில்லை என்று, மாவட்ட நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலை. நிர்வாகம் நிலம் வழங்க தயாராக இருந்தபோதும், தங்களது கருத்தைக்கூட கேட்காமல் எல்லை நிர்ணயம் செய்துள்ளது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது என்றும் புகார் தெரிவித்துக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வித் துறைச் செயலருக்கு விரிவாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு, பாரதியார் பல்கலை. வளாகத்தில் இருந்து 130.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் இருந்து விடியோ கான்பரன்சிங் மூலமாக அண்ணா பல்கலை. கட்டடத்துக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து, 130.33 ஏக்கர் நிலத்துக்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலை.க்கு எடுக்கப்பட்ட நிலம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அண்ணா பல்கலை.யை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
"அண்ணா பல்கலை.க்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் சட்டச் சிக்கலில் இருக்கிறது.
நிலம் வழங்கியவர்கள் கூடுதல் இழப்பீடு கோரித் தொடர்ந்த வழக்கில் ரூ. 120 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பாரதியார் பல்கலை. நிர்வாகம் இடைக்காலத் தடை பெற்றுள்ளது.
அதோடு, நிலத்தின் உரிமையாளராக தற்போது வரை பாரதியார் பல்கலை. பதிவாளர் இருக்கிறார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை மாநில அரசு எடுப்பது சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
அதோடு, அண்ணா பல்கலை.க்கு எடுக்கப்பட்ட நிலம் பயன்பாட்டில் இல்லையென்று கூறுவது தவறானது. மத்திய அரசு நிறுவனமான வனக் கல்லூரியுடன் இணைந்து அப் பகுதியில் பாரதியார் பல்கலை. ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலத்தை அண்ணா பல்கலை.க்கு வழங்குவது ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
"இத்தகைய சட்டச் சிக்கல்களை மாநில அரசின் கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு செல்லவில்லை' என்கிறார் பாரதியார் பல்கலை. ஆசிரியர் சங்க செயலர் டி.முத்துகிருஷ்ணன்.
நிலஆர்ஜிதம் செய்யும்போதும், ஒரு நிறுவனத்தின் நிலத்தை மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கும்போதும், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். அதன்படி, பாரதியார் பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் கருத்துக்களைக் கேட்காமல் நிலத்தை தன்னிச்சையாக எடுத்துள்ளது.
அண்ணா பல்கலை.க்கு வழங்கப்பட்ட நிலத்தில் பல அரிய உயிரினங்கள் இருக்கின்றன. அப் பகுதியில் கட்டடங்கள் கட்டும்போது அவை அழிந்துபோகக் கூடிய சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
"பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அண்ணா பல்கலை.க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன. அரசின் அறிவிப்பும், செயல்பாடும் முரண்பாடாக இருக்கிறது' என்று பாரதியார் பல்கலைக்கழக எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர், அலுவலர் சங்க செயலர் செல்வம் தெரிவித்தார்.
இப் பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநர், முதல்வர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோரில் சந்தித்து கோரிக்கை பற்றி தெரிவிப்பது என்று, பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.