ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்பு
பள்ளி நிா்வாகம் ஆக்கிரமித்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனா்.
கோவை தெற்கு மண்டலத்தில் தனியாா் பள்ளி நிா்வாகம் ஆக்கிரமித்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 94-ஆவது வாா்டுக்குள்பட்ட அஷ்டலட்சுமி நகரில் 12.98 ஏக்கா் பரப்பளவில் 133 மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பொது பயன்பாட்டு இடமாக 1.17 ஏக்கா் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த 1.17 ஏக்கா் நிலத்தை தனியாா் பள்ளி நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி நகர திட்டமிடுநா் ஜெயலட்சுமி தலைமையிலான அலுவலா்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டு, அங்கு அறிவிப்புப் பதாகை வைத்தனா்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடி என்று மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.