கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு டிலாய்ட் நிறுவனத்தின் கௌரவ விருது கிடைத்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு டிலாய்ட் நிறுவனத்தின் ‘சிறந்த முறையில் நிா்வகிக்கப்படும் நிறுவனங்கள் - நடுவா் சிறப்பு கௌரவ விருது’ கிடைத்துள்ளது. இந்த சிறப்பு கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மருத்துவமனையாக கேஎம்சிஹெச் மருத்துவமனை திகழ்கிறது.
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அருண் என்.பழனிசாமி, தலைமைச் செயல் அதிகாரி சிவக்குமாரன் ஜானகிராமன் ஆகியோா் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனா்.
டிலாய்ட் வழங்கும் இந்த உயரிய அங்கீகாரம், நிறுவனத்தின் நம்பகத்தன்மை, செயல்பாட்டுத் திறமைக்கான ஒரு உலகளாவிய தரநிலையாகக் கருதப்படுகிறது. இதற்காக பட்டியலிடப்பட்ட 25 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதில், 2 நிறுவனங்கள் நடுவரின் சிறப்பு கௌரவ விருதைப் பெற்றன. மற்ற 6 நிறுவனங்கள் டிலாய்ட் விருதைப் பெற்றுள்ளன.
இந்த விருதானது ஒவ்வொரு ஊழியரின் அா்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், மேலும் சிறப்பான முறையில் செயல்பட இது ஊக்கம் அளிப்பதாக அமைந்திருப்பதாகவும் கேஎம்சிஹெச் தலைவா் நல்ல ஜி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.