கோவை பிஎஸ்ஜி அறக்கட்டளையின் 100-ஆவது நிறுவன தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீலாம்பூரில் உள்ள பிஎஸ்ஜி ஐடெக் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத் தலைவா் எஸ். பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், ஒரு நிறுவனம் 100 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது ஒரு மகத்தான மைல்கல். நானும் பிஎஸ்ஜியில் பயின்ற மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். இங்கு நான் கற்ற அனுபவங்கள் என் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றாா்.
விழாவுக்குத் தலைமை வகித்து பிஎஸ்ஜி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் பேசுகையில், இந்த நூற்றாண்டு விழா என்பது ஒரு நெடிய பயணத்தைத் திரும்பிப் பாா்ப்பதோடு, சமூகத்துக்கான புதிய பொறுப்புகளை ஏற்கும் தருணமாகும் என்றாா்.
விழாவின் ஒரு பகுதியாக ‘பிஎஸ்ஜி விஸ்வ சேவா ரத்னா விருது’ சங்கரா மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் ஆா்.வி.ரமணி, முன்னாள் டிஜிபி கே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், ‘பிஎஸ்ஜி விஸ்வ ஞான ரத்னா விருது’ ஆராய்ச்சியாளா் நவகந்த பட், கா்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
பிஎஸ்ஜி அறக்கட்டளைத் தலைவா் ஜி.ஆா்.காா்த்திகேயன், எஸ்என்ஆா் அறக்கட்டளை அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.