டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவாரா?
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமுக்குத் தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமுக்குத் தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி வனச் சரகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது.
வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, டாப்சிலிப், அதன் சுற்றுப் பகுதிகளில் வெட்டப்படும் மரங்களைக் கொண்டு செல்வதற்காக டாப்சிலிப்பில் யானைகள் முகாம் அமைக்கப்பட்டது. வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு, டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்த யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்குள்ள கலீம் (51), சூர்யா (43), கபில்தேவ் (34), பரணி (32), மாரியப்பன் (28) ஆகிய ஐந்து யானைகள் கும்கி பயிற்சி பெற்ற சிறந்த யானைகள் ஆகும். விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவது, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவது, வனப் பகுதி மேம்பாடு, யானைச் சவாரி, வனப் பகுதிக்குள் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது ஆகிய பணிகளுக்கு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டாப்சிலிப் முகாமில் தற்போது, 22 யானைகள் உள்ளன.இப்படி மிகச் சிறந்த யானைகள் வளர்ப்பு முகாமாக டாப்சிலிப் இருந்தாலும், இங்குள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக கால்நடை மருத்துவர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், யானைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பாகன்களே தங்களுக்குத் தெரிந்த முறையில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது.
மோசமான உடல் நலக் குறைவு ஏற்படும்போது, கோவை வனக் கால்நடை மண்டல மருத்துவர் மனோகரனை வரவழைக்க வேண்டியுள்ளது.
ஆனால், அவர் டாப்சிலிப் வந்து யானைகளைப் பரிசோதிக்க காலதாமதம் ஏற்படுவதால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு டாப்சிலிப் யானைகள் முகாமுக்குத் தனியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் வினோத்குமார் கூறியதாவது: டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளின் உடல்நலத்தைக் காக்கத் தனியாக வனக் கால்நடை மருத்துவர் இல்லாதது மிகச் சிரமமாக உள்ளது. முதுமலையில் உள்ளது போன்றே டாப்சிலிப்பிக்கும் தனியாக வனக் கால்நடை மருத்துவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில், "மண்டல மருத்துவர் மனோகரன் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வதால் டாப்சிலிப் பகுதிக்குத் தனியாக வனக் கால்நடை மருத்துவரை நியமிப்பது அவசியம் என்றார்.